சரணடைந்த ‘குழந்தைப் போராளிகள்` பெற்றோருடன் பேச அனுமதி

புலிகள் அமைப்பில் இருந்த சிறுவர்களை அவர்களது பெற்றோர்களுடன் தொலைபேசியில் பேசவும் கடிதம் எழுதவும் அனுமதித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளுடனான போரின்போது புலிகள் இயக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வவுனியாவில் உள்ள முகாம்களில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது போர் முடிவுற்று அமைதி திரும்பியுள்ள சூழ்நிலையில் அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு சபைத் தலைவர் ஜெகத் வெள்ளவத்த கூறியுள்ளதாவது;

புலிகள் இயக்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் உட்பட ஏராளமான சிறுவர்கள் நல்வாழ்வு முகாம்களில் உள்ளனர். இவர்களில் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதவும் தொலைபேசியில் பேசவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், நேரில் சந்தித்துப் பேச இன்னமும் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் மறுவாழ்வுக்காக தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட சிறுமிகள் பலரும் முகாம்களில் உள்ளனர். அவர்கள் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களுக்காக இலங்கை அரசு நான்கு இடங்களில் மறுவாழ்வு நிலையங்களை அமைத்துள்ளது. இதனிடையே தற்போது பல்வேறு இடங்களில் பதுங்கியிருக்கும் புலிகள் இயக்கத்தினர் பொலிஸாரிடம் சரணடைய வேண்டுமென்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply