விழுந்து கிடந்த இளைஞன் – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 13 ஆம் கட்டை சந்தியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்த இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்றிரவு (01) 7.10 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய், கன்தலாவ பகுதியைச் சேர்ந்த சசில மல்சான் (21வயது) எனவும் தெரியவருகின்றது.

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 13 ஆம் கட்டை சந்தியில் இளைஞன் ஒருவன் வீதியோரத்தில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் விழுந்து கிடப்பதாக 1990 அவசர அம்பியுலன்ஸ் சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உடனடியாக குறித்த இளைஞனை அருகில் உள்ள தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் நடந்து சென்ற இளைஞனை வாகனம் மோதி சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த இளைஞரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் அருகில் குடையொன்று காணப்படுவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply