பிரபாகரனின் அச்சுறுத்தலால் மூடப்பட்ட கட்சி அலுவலகத்தை மீண்டும் திறப்போம் : டக்ளஸ்

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று காரைதீவு கலாச்சார நிலையம் மக்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது அவர் அங்கு உரையாற்றுகையில்

தேர்தலுக்கு இன்னும் 2, நாட்கள் தான் எஞ்சி இருக்கின்றது. இந்த தேர்தலுடன் எமது கடமைகள் பொறுப்புகள் நிறைவடைய போவதில்லை.

1990 ஆண்டு ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பகுதியில் ஈபிடிபி கட்சியின் அரசியல் அலுவலகம் அமைக்கப்பட்டு இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்தது.

துரதிஸ்டவசமாக இவ்வலுவலகம் பின்னர் மூடப்பட்டது. அதுமாத்திரமன்றி அந்த காலப்பகுதியில் இருந்த பிரபாகரனின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரனின் பணிப்புரைக்கமைய ஈபிடிபி உறுப்பினர்களை கொலை செய்ததும் கொல்ல முற்பட்டதும் அவர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டமையினாலும் இவ்வலுவலகத்தை மூட வேண்டி ஏற்பட்டது.

ஆனால் மிக விரைவில் இம்மாவட்டத்திற்குரிய அலுவலகத்தை தோழர்களின் உதவியுடன் மீண்டும் திறக்க இருக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற இருக்கின்றது.பிரதான வேட்பாளர்களாக மூவர் களத்தில் இருக்கின்றார்கள்.

இம்மூவரில் எமது ஈபிடிபி கட்சி விரும்புகின்ற ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார்.ஏனைய வேட்பாளர்கள் சஜீத் மற்றும் அனுர இதர போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

அவர் கடந்த 2 வருடங்களில் தன்னால் நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என நிரூபித்திருக்கின்றார்.

கடந்த காலங்களில் எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்ததை யாவரும் அறிவீர்கள். அதிலிருந்து மீட்டு நாட்டை முன் கொண்டு செல்லும் பணியை அவர் தான் முன்னெடுக்கின்றார்.

எனவே ரணில் விக்ரமசிங்கவின் சேவை தொடர வேண்டும்.

எரிவாயு சின்னத்தில் ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாக போட்டியிடுகின்றார். எரிவாயு(சிலின்டர்) சின்னம் எல்லோருக்கும் பரீட்சயமான சின்னம். வீட்டுப்பாவனைக்கான சின்னம். அந்த வகையில் எதிர்வரும் தேர்தலில் சிலின்டர் சின்னத்திற்கு வாக்கினை செலுத்தி அவரது வெற்றியில் நாங்கள் பங்கெடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் நாங்கள் எமது பிரதேசங்களை அபிவிருத்தி அடைய செய்வதற்கும் முன்னேற்றம் அடைய செய்வதற்கும் சாதகமாக அமையும் என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply