பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை மற்றும் துயரம் ஆகியவற்றின் அடிப்படையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றிப்பெற்றார் : விமல் வீரவன்ச

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை மற்றும் துயரம் ஆகியவற்றின் அடிப்படையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றிப்பெற்றார். பட்டலந்த விவகாரம் மீண்டும் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை கடந்த காலத்தை போன்றே பயணிக்கும் என்பது எமது நிலைப்பாடாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

மனிதகுலத்துக்கு எதிராக சித்திரவதை முகாமை நடாத்திய உண்மையான குற்றவாளிக்கு பாரபட்சமின்றிய வகையில் தண்டனை வழங்குவதற்கான காலங்கள் பல கடந்து வந்துள்ள நிலையில் தற்போது ஊடக வெளிப்படுத்தலுக்காக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பயன்படுத்துவது பாதிக்கப்பட்டவர்களுக்கும், வரலாற்றுக்கும் அநீதி இழைப்பதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் தமது நிலைப்பாட்டை பதிவேற்றம் செய்துள்ளார்.

அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது,

அல்ஜசீரா ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியை அடிப்படையாகக் கொண்டு பிரதான பேசுபொருளாக்கப்பட்டுள்ள பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வர் அறிக்கையின் சாரம்சத்தை சபையில் வாசிக்கையில் சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் கண்ணீர் சிந்தினார்.

பட்டலந்த சித்திரைவதை முகாம் இலங்கையின் வாழும் உரிமையை துயரத்துக்குள்ளாக்கிய சம்பவம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்;பிட்டிருந்தார்.இருப்பினும் அவர் தனது பத்து ஆண்டுகால ஆட்சியில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எந்த குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கவில்லை. இருப்பினும் பட்டலந்த சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை மற்றும் துயரம் ஆகியவற்றின் அடிப்படையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றிப்பெற்றார். பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கை தொடர்பில் மீண்டும் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை கடந்த காலத்தை போன்றே பயணிக்கும் என்பது எமது நிலைப்பாடாகும்.

சுமார் 40 ஆண்டுகாலமாக இந்த அறிக்கை மறைக்கப்பட்டிருந்த பின்னணியில் அநேகமான முக்கிய சாட்சியாளர்கள் மற்றும் பொறுப்புதாரிகள் உயிரிழந்துள்ளனர்.இந்த அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவை சட்டத்தால் பொறுப்புக்கூற வேண்டிய ஆவணமல்ல, இதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்துறைகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.இதற்கு மேலும் காலம் செல்லும்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அண்மை கால வரலாற்றில் ‘பட்டலந்த சம்பவம்’ தொடர்பில் குற்றஞ்சாட்டப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடன் அரசியல் ரீதியில் மிகவும் இணக்கமாக செயற்பட்டதை அனைவரும் நன்கு அறிவோம். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் (2015-2019) அலரிமாளிகையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அடிக்கடி சந்தித்ததாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அரசியலில் அரசியலில் இணக்கமாக செயற்பட்ட இரண்டு தரப்பினரும் இன்று ‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’ முன்னிலைப்படுத்தி விரிசலடைந்துள்ளதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது.

மனித குலத்துக்கு எதிராக சித்திரவதை முகாம் நடத்திய உண்மையான குற்றவாளிக்கு பாரபட்சமின்றிய வகையில் தண்டனை வழங்குவதற்கான காலங்கள் பல கடந்து வந்துள்ள நிலையில் தற்போது ஊடக வெளிப்படுத்தலுக்காக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பயன்படுத்துவது பாதிக்கப்பட்டவர்களுக்கும், வரலாற்றுக்கும் அநீதி இழைப்பதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply