யாழ். குடாநாட்டில் கடலுணவு விலை வீழ்ச்சி

யாழ். குடாநாட்டில் கடந்த பல வருடங்களாக கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கடல் வலயத்தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து கடந்த சனிக்கிழமை குடாநாட்டின் சகல சந்தைகளிலும் கடலுணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. கடந்த காலங்களில் மீனவர்கள் குறிப்பிட்ட தூரத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிடும் நாட்களில் மட்டுமே கடல்தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிக கடல் உணவுகளை அவர்களால் பிடிக்கவும் முடியவில்லை.

அத்துடன் மொத்த மீன் வியாபாரிகள் மீனவர்களிடம் கடல் உணவுகளை கடற்கரையில் வாங்கி அவற்றைக் குளிரூட்டிகளில் வைத்து விற்பனை செய்தனர். இவ்வாறான காரணங்களால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்ற கடல் உணவுகள் அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தன.

தற்போது 24 மணி நேரமும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளில் கடலில் தொழில் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இத்தடை நீக்கப்பட்டுள்ளதால் மீனவக் குடும்பங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், பலருக்கு இது நல்ல வருமானத்தைத் தருவதாகவும் கூறியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை முதல் குடாநாட்டில் அதிகாலை 5 மணிக்கு கடல் உணவுகளை மக்கள் வாங்கலாம் எனவும் மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன. வலி வடக்கு, வடமராட்சி கிழக்கு, தீவுப் பகுதிகளில் கடற்றொழில் நடைபெற்றால் தெற்கே கடல் உணவுகளை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply