விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை சபைக்கு சமர்ப்பிப்போம் : சாமர சம்பத்

விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம். பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை போன்று 88 மற்றும் 89 காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பட்டலந்த அறிக்கை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.இதுதான் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. கடந்த காலங்களில் பேசப்பட்ட பிரதான விடயங்கள் இனி மறக்கப்படும். ஊடகங்கள் பட்டலந்த விவகாரம் தொடர்பில் மாத்திரமே இனி அவதானம் செலுத்தும். இதனால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா, புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் பிரதான சந்தேக நபரான செவ்வந்தி சரணடைவாரா,

பட்டலந்த சித்திரவதை முகாமினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. அரசாங்கம் இந்த அறிக்கைகளை சமர்ப்பித்ததை போன்று பிரதான மூன்று படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளையும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விஜயகுமாரதுங்க படுகொலை உட்பட முக்கிய படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம்.1989 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 ஒருங்கிணைப்பாளர்கள் கொல்லப்பட்டார்கள். அதேபோல் சுதந்திர கட்சியின் 6300 உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்காதா,

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. மொனராகலை தேர்தல் தொகுதியில் 42 வாக்குப் பெட்டிகளில் ஒருவாக்குகள் கூட இருக்கவில்லை. அன்று விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால் சிறிமாவோ பண்டாரநாயக்க வெற்றிப்பெற்றிருப்பார். 42 வாக்குப் பெட்டிகளில் ஒரு வாக்குகள் கூட ஏன் இருக்கவில்லை. இதனையும் ஆராய வேண்டும்.

பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம் 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிரான இன கலவரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கட்டவிழ்த்துவிட்டது. தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள்.இவர்கள் இன்று இனநல்லிணக்கம் பற்றி பேசுகிறார்கள் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply